
கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுதவந்து 50 ஆண்டுகள் நிறைகின்றன. அவரது முதல் கவிதை நூலான ‘வைகறை மேகங்கள்’ கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது. அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இராண்டாம் ஆண்டு மாணவர். இந்த 50 ஆண்டுகளில் அவர் 38 நூல்களும் 7500 பாடல்களும் எழுதியிருக்கிறார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ஐம்பதாண்டு கால இலக்கிய பயணத்தின் சுவைமிகும் தருணங்களை நாமும் பருகுவோம். இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் சில சிறப்புச் சலுகைகளும் சுவாரசியமான அனுபவங்களும் காத்திருக்கின்றன.

வைகறை மேகங்கள்
19 வயதில் வெளிவந்த கவிஞரின் முதல் கவிதைத் தொகுதி. காதல் - இலட்சியம் - தத்துவம் - வாழ்வியல் கொழிக்கும் மரபுக் கவிதைகள். கவியரசர் கண்ணதாசனின் அணிந்துரை கொண்டது.
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
கவிஞரின் முதல் புதுக்கவிதைத் தொகுதி. கவிஞரின் திரை நுழைவுக்கு கட்டியங்கூறிய கவிதைகள். அறச்சீற்றமும் சமூக அக்கறையும் கொண்ட ஆவேசக் கவிதைகள்.
இன்னொரு தேசிய கீதம்

கவிராஜன் கதை
பாரதியாரின் வரலாறு புதுக்கவிதையில். பாரதியார் நூற்றாண்டில் மகாகவிக்குக் கவிப்பேரரசின் காணிக்கை.
இதுவரை நான்
30 வயதில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை. கவிப்பேரரசின் இலக்கியம் வாழ்வு இரண்டுக்குமான அடிப்படை வரலாறு.
என் பழைய பனை ஓலைகள்
கல்லூரி நாட்களில் படைத்த எழுச்சியான மரபுக் கவிதைகளின் தொகுப்பு. பல கவிதைகள் பரிசு பெற்றவை.
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
மண்ணியல் சார்ந்த கவிஞரின் முதல் நாவல். நட்பு என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்து வெற்றி பெற்றது.
என் ஜன்னலின் வழியே
கலை ஆளுமைகள் மற்றும் பாடல்கள் குறித்த கட்டுரைகள்.
மெளனத்தின் சப்தங்கள்
தமிழ்த் திரைப்படங்கள் குறித்து சமூகப் பிரக்ஞையோடு எழுதப்பட்ட கலைக் கட்டுரைகள்.
கல்வெட்டுக்கள்
தமிழ் இலக்கியவெளி குறித்து கவிஞரின் ஆழ்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள்.
கொடிமரத்தின் வேர்கள்
சமகால சமூகம் குறித்த போர்க்குணம் மிக்க புதுக்கவிதைகள்.
கேள்விகளால் ஒரு வேள்வி
கலை – பாடல்கள் – சமூகம் குறித்து இளைஞர்களின் வினாக்களுக்குக் கவிஞரின் விடைகள்.
ரத்ததானம்
புத்தம் புதிய உள்ளடக்கங்களில் மரபுக் கவிதைகள்.
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
இளைய தலைமுறையின்மீது பெருந்தாக்கம் ஏற்ப்படுத்திய தன்முனைப்புக் கட்டுரைத் தொகுப்பு. பல கல்லூரிகளில் பாடமாய்த் திகழ்வது.
நேற்றுப் போட்ட கோலம்
பாடல்கள் பிறந்த சுவையான நிகழ்வுகள் - சுகமான தமிழில்.
மீண்டும் என் தொட்டிலுக்கு
ஓர் அழகான நாவலும் ஒரு குறுநாவலும்.
எல்லா நதியிலும் என் ஓடம்
இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் வெளிவந்த புகழ்மிக்க கவிதைகளின் மொழிபெயர்ப்புகள்.
வடுகபட்டி முதல் வால்காவரை
கோர்ப்பசேவ் காலத்தில் ரஷ்யாவுக்குச் சென்று வந்த கவிஞரின் முதல் பயண நூல்.
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
தமிழ்க் கவிதை வெளியைப் புரட்டிப்போட்ட புதுக்கவிதைத் தொகுதி. மரங்களைப் பாடுவேன் என்ற புகழ்மிக்க கவிதையும் இதற்குள்தான்.
காவிநிறத்தில் ஒரு காதல்
தமிழகத்தின் புவியியல் வழியே பயணமாகும் ஒரு காதல் கதை.
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
கவிப்பேரரசின் வாழ்வியலைப் பாதித்த ஆழமான ஆளுமைகளின் அழுத்தமான நடைச்சித்திரம்.
ஓர் போர்க்களமும் இரண்டு பூக்களும்
சமஸ்தானங்களின் பின்னணியில் எழுதப்பட்ட துடிப்புமிக்க காதல் கதை.
சிகரங்களை நோக்கி
கவிதை கொழிக்கும் உரைநடையில் எழுதப்பட்ட கவிஞரின் முதல் அறிவியல் நாவல்.
இதனால் சகலமானவர்களுக்கும்
சமூகத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆழ்ந்த இலக்கிய வாழ்வியல் கட்டுரைகள்.
வில்லோடு வா நிலவே
ஈராயிரமாண்டுகட்கு முற்பட்ட தமிழர்களின் வரலாறு பண்பாட்டைத் தீட்டிக்காட்டும் கவிஞரின் ஒரே வரலாற்று நாவல்.
தண்ணீர் தேசம்
கடலோடு நிகழும் ஒரு காதல் கதை. தமிழில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத முதல் முயற்சி. கவிதை இழைத்த உரைநடை இதன் நடை.
தமிழுக்கு நிறமுண்டு
காலத்தைப் புதுப்பித்துக்கொடுக்கும் புதுக்கவிதைகள். கவிதைகளைப் போலவே முன்னுரையும் பெரிதும் பேசப்படுவது.
பெய்யெனப் பெய்யும் மழை
வெறிகொண்ட தமிழால் எழுதப்பட்ட நெறிகொண்ட புதுக்கவிதைகள். இந்த நூலில் வெளியீட்டு விழாவில்தான் ‘கவிப்பேரரசு’ பட்டத்தைக் கவிஞருக்கு கலைஞர் வழங்கினார்.
வைரமுத்து கவிதைகள்
1972 முதல் 28 ஆண்டுகள் கவிஞர் படைத்த கவிதைகளில் தேர்ந்தெடுத்த கவிதைகளின் பெருந்தொகுப்பு இது. 2000 ஆண்டு வெளிவந்தது. அறிஞர் பெருமக்கள் ஆகியோர் ஒரு குழுவாக அமர்ந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்தனர். அந்நாள் முதல்வர் கலைஞர் நூலை வெளியிட்டார். கலைஞானி கமல்ஹாசன் முதற்படி பெற்றுக்கொண்டார்.
கள்ளிக்காட்டு இதிகாசம்
வைகை அணை கட்டப்பட்டபோது சுதந்திர இந்தியாவில் அகதிகளாய் வெளியேற்றப்பட்ட கிரமத்து மக்களின் வாழ்வும் வரலாறும் சொல்லும் நாவல். சாகித்ய அகாடமி விருது பெற்றது. 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்படுகிறது.
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
தனது நடையிலிருந்து விடுபட்டு நவீன மொழியில் கவிஞர் படைத்த மாறுபட்ட புதுக்கவிதைகள்.
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
ஐரோப்பா - ஆசியாவின் வரலாறு பண்பாடுகளைப் பதிவு செய்யும் கவிஞரின் புகழ்மிக்க பயண நூல்.
கருவாச்சி காவியம்
மண்ணியல் வழியே பெண்ணியலைப் பதிவு செய்த ஒரு பெரும்படைப்பு. பல நூற்றாண்டுகளாய் வாழப்பட்டு வந்த கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையை உதிரத்தில் வரைந்த உயிர்ச்சித்திரம்.
பாற்கடல்
இலக்கியம் – சமூகம் – வாழ்வியல் – கலை – அரசியல் குறித்த வாசகர்களின் அரிய கேள்விகளுக்கு விளைந்த ஆழ்ந்த விடைகள்.
ஆயிரம் பாடல்கள்
கவிஞர் எழுதிய 7000 திரைப்பாடல்களிலிருந்து கவிஞரே தேர்ந்தெடுத்த 1000 பாடல்களில் தொகுப்பு. 1000 பாடல்களுக்கும் பாடல் பிறந்த கதையைச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.
மூன்றாம் உலகப்போர்
புவிவெப்பமாதல் – உலகமயமாதல் என்ற இரு பெரிய வினாக்களுக்கிடையே ஓர் இந்திய உழவனின் வாழ்வியல். உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட உலக நாவல். மலேசியா டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளையின் சிறந்த ‘உலகத் தமிழ் நாவல்’ பரிசுபெற்றது (10ஆயிரம் அமெரிக்க டாலர்)
வைரமுத்து சிறுகதைகள்
இரண்டு நூற்றாண்டுகளின் வாழ்வியல் – உளவியல் – உலகியலைப் பாத்திரங்களின் வழியே பதிவு செய்யும் உலகத்தரம் வாய்ந்த 40 சிறுகதைகள்.
தமிழாற்றுப்படை
3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலைபெறும் என்று சான்றோர் சான்றளித்த நூல். நூலுக்குள் ஒரு நூலகம் தமிழாற்றுப்படை.2022 சென்னைப் புத்தகக் காட்சியில் கவிஞர் புத்தகங்கள்
புத்தக நிலையம் | கடை எண் |
---|---|
திருமகள் நிலையம் | 350 & 351 |
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் | 267 & 268 |
டிஸ்கவரி புக் பேலஸ் | F44 |
விசா பப்ளிகேஷன்ஸ் | 90 & 91 |
சுவாசம் புக் ஆர்ட் | F26 |